யார் இந்த இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவய் இவர் கொடுத்த முக்கிய தீர்ப்பு என்ன ? இவர் இரண்டாவது தலித் தலைமை நீதிபதி ஆவார் | கிங் நியூஸ் 24x7

யார் இந்த இந்தியாவின் புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவய் இவர் கொடுத்த முக்கிய தீர்ப்பு என்ன ? இவர் இரண்டாவது தலித் தலைமை நீதிபதி ஆவார் | கிங் நியூஸ் 24x7
X

உச்ச நீதிமன்ற நீதிபதி 

இந்தியாவின் புதிய தலைமை நீதிபதியாக தேர்ந்தெடுக்க பட்ட பூஷன் ராமகிருஷ்ணா கவய் எனும் பி.ஆர்.கவய், இந்தியாவின் 52வது தலைமை நீதிபதியாக நேற்று (மே 14) பதவியேற்றார். சஞ்சீவ் கன்னா ஓய்வைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக அவர் பொறுப்பேற்றுள்ளார். உச்ச நீதிமன்றத்தில் பி.ஆர்.கவய்க்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் பிரதமர் மோதி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


நீதிபதி பி.ஆர்.கவய் நாட்டின் இரண்டாவது தலித் தலைமை நீதிபதியாக இருப்பார். நீதிபதி கவய்க்கு முன்பு, நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் 2007 இல் முதல் தலித் தலைமை நீதிபதியாக ஆனார்.உச்ச நீதிமன்றத்தின் சீனியாரிட்டி பட்டியலில் நீதிபதி கவாயின் பெயர் முதலிடத்தில் உள்ளது, எனவே நீதிபதி கன்னா அவரது பெயரை முன்மொழிந்துள்ளார்.


1960 நவம்பர் 24 அன்று மகாராஷ்டிராவின் அமராவதி நகரில் பிறந்த தலைமை நீதிபதி பி.ஆர். கவய் , கேரளா மற்றும் பிஹார் மாநில ஆளுநராக பணியாற்றியுள்ள குடியரசுக் கட்சித் தலைவர் ஆர்.எஸ். கவாயின் மகன் ஆவார்.அமராவதியில் பள்ளிக் கல்வியை முடித்த அவர், சட்டம் படிக்க மும்பைக்கு சென்றார்.1985 மார்ச் 16-ஆம் தேதி பார் கவுன்சிலில் உறுப்பினரான பூஷன் கவய், 1987 வரை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரலுடன் பணியாற்றினார்.


1987ஆம் ஆண்டில் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தனியாக பயிற்சியைத் தொடங்கிய அவர், 1990ம் ஆண்டில் நாக்பூருக்கு குடிபெயர்ந்துவிட்டார். பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பிரிவில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடர்ந்தார்.நாக்பூர் மற்றும் அமராவதி நகராட்சிகளுக்கும், அமராவதி பல்கலைக் கழகத்திற்கும் சட்ட ஆலோசகராக அவர் பணியாற்றியுள்ளார்.


ஆகஸ்ட் 1992 முதல் ஜூலை 1993 வரை, பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சில், அரசு உதவி வழக்கறிஞர் மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞர் பதவியை வகித்தார்.2000 ஜனவரி 17-ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் பெஞ்சிற்கு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார், பின்னர் 2003 நவம்பர் 14 -ஆம் தேதி உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியானார்.2005 நவம்பர் 12 முதல் பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக பணியாற்றும் போது பல முக்கியமான தீர்ப்புகளை வழங்கினார். 14 ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய பிறகு, 2019 மே 24-ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.


இன்று இந்திய தலைமை நீதிபதியாக பதவியேற்றுள்ள கவய் 6 மாத பணிக்குப் பிறகு 2025 நவம்பர் 23இல் ஓய்வு பெறுவார்.நீதிபதி எம். ஹிதாயத்துல்லா மற்றும் நீதிபதி ஷரத் பாப்டே ஆகியோரைத் தொடர்ந்து, இந்திய நீதித்துறையில் மிக உயர்ந்த பதவிக்கு உயரும் நாக்பூர் வழக்கறிஞர் சங்கத்தின் மூன்றாவது உறுப்பினர் கவய் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் வழங்கிய முக்கிய தீர்ப்பு !


உச்ச நீதிமன்ற நீதிபதியாக, நீதிபதி பூஷன் கவய் பல வரலாற்று சிறப்புமிக்க வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை 2023 ஆம் ஆண்டில் உறுதி செய்த உச்ச நீதிமன்ற அமர்வில் பி.ஆர். கவாயும் இடம் பெற்றிருந்தார்.பண மதிப்பிழப்பு வழக்கு தொடர்பான தீர்ப்பை வழங்கும் போது, "இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டத்தின் பிரிவு 26(2) இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களை அனைத்து வகையான ரூபாய் நோட்டுகளையும் தடை செய்யப் பயன்படுத்தலாம். இந்தப் பிரிவில் பயன்படுத்தப்படும் 'ஏதேனும்' என்ற வார்த்தையை குறுகிய அர்த்தத்தில் புரிந்துக் கொள்ள முடியாது" என்று நீதிபதி கவய் கூறியிருந்தார்.


2024 ஆம் ஆண்டில், உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) இடஒதுக்கீடு கட்டமைப்பிற்குள் துணை வகைப்பாடு அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்படுகிறது என்ற ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. நீதிபதி பூஷன் கவய் இந்த அமர்வில் இடம் பெற்றிருந்தார்.அப்போது, நீதிபதி கவய் உட்பட நான்கு நீதிபதிகள், SC மற்றும் ST இடஒதுக்கீடுகளுக்குள் கிரீமி லேயர் விதியை அறிமுகப்படுத்தலாம் என பரிந்துரைத்தனர்.


உத்தரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை கையாண்ட 2 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நீதிபதி கவய் தலைமை தாங்கினார்.மனுக்களை விசாரித்த நீதிபதி, உரிய நடைமுறையைப் பின்பற்றாமல் சொத்துகளை அழிப்பது சட்டவிரோதமானது என்று கூறி, இடிக்கும் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு எதிராக இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் பின்பற்ற வேண்டிய நடைமுறை பாதுகாப்புகளை உச்ச நீதிமன்றம் வகுத்தது. முக்கியமாக, இந்த வழிகாட்டுதல்கள் வழக்கில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு மட்டுமல்ல, நாடு முழுவதும் பொருந்தும் என்றும், இந்த விதிகளை செயல்படுத்துவதற்கு பொருத்தமான சுற்றறிக்கைகளை வெளியிடுமாறும் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் அந்த அமர்வு உத்தரவிட்டது.




Next Story