உத்தர பிரதேசத்தில் 9 பெண்களை கொலை செய்தவர் கைது !!

உத்தர பிரதேசத்தில் 9 பெண்களை கொலை செய்தவர் கைது !!
X

கைது

உ.பி பரேலியில் கடந்தாண்டு ஜூன் முதல் கடந்த ஜுலை மாதம் வரை 9 பெண்களை கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். உத்தர பிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் பெண்களின் தொடர் கொலை வழக்கு அதிகரித்த நிலையில் போலிசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். இது வரை 9 பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல் கரும்புக்காட்டுக்குள் தொலைவில் கிடந்துள்ளது. பிரேத பரிசோதனையில் பாலியல் ரீதியாக இவர்கள் பாதிக்கப்படவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளார். தீவிர தேடுதல் வேட்டைக்குப்பின் குல்தீப் குமார் கங்வர் (38) என்ற நபரை உ.பி. போலீஸார் கடந்த வியாழக்கிழமை கைது செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில் 6 பெண்களை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் மற்ற 3 பெண்கள் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.குல்தீப் குமார் கங்வரின் சிறு வயது வாழ்க்கையே மகிழ்ச்சிகரமாக இல்லை. இவரது தாய் உயிருடன் இருக்கும்போதே, இவரது தந்தை மறுமணம் செய்துள்ளார். இதனால் இவருக்கு இவரது சித்தி மீது கடும் கோபம் இருந்துள்ளது.

குல்தீப் குமாருக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் குடும்ப வன்முறை காரணமாக, குல்தீப் குமாரின் மனைவி கணவனை பிரிந்து சென்று விட்டார். இதனால் இவருக்கு பெண்கள் மீது மிகுந்த வெறுப்பு இருந்துள்ளது. சைக்கோவாக மாறிய இவர் பெண்களை கடத்திச் சென்று கரும்பு தோட்டத்தில் வைத்து கொலை செய்துள்ளார்.

கொலை செய்தபின் அவர்களிடம் இருந்த ஸ்டிக்கர் பொட்டு, லிப்ஸ்டிக், அடையாள அட்டை ஆகியவற்றை எடுத்து வந்து வெற்றியின் அடையாளமாக பாதுகாத்துள்ளார். கரும்புத் தோட்டத்தில் 10 முதல் 15 மீட்டர் தூரத்துக்குள் கொலை செய்யப்பட்டவரின் உடல் கிடந்தால், அதை யாரும் எளிதில் பார்க்கமுடியாது என போலீஸ் விசாரணையில் குல்தீப் குமார் தெரிவித்துள்ளார்.

அனைத்து கொலைகளையும், நன்கு திட்டமிட்டு போலீஸில் எளிதில் சிக்காதபடி செய்துள்ளார். கொலைக்குப்பின் இவர் செல்போனை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். சிறுவயது முதல் வாழ்க்கையில் சந்தித்த விரக்தி, பெண்கள் மீது ஏற்பட்ட வெறுப்பு காரணமாக இவர் பெண்களை தொடர் கொலை செய்வதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags

Next Story