டிராகன் விண்கலத்தில் இன்று மாலை பூமியை வந்தடைகிறார் சுபான்ஷு சுக்லா!!

subhanshu shukla
இஸ்ரோ, நாசா, ஆக்ஸியம் ஸ்பேஸ் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மனிதர்களை அனுப்பும் ‘அக்ஸியம் - 4’ திட்டத்தை முன்னெடுத்தன. அதன்படி இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா , முன்னாள் நாசா வீரர் பெக்கி விட்சன், ஹங்கேரி வீரர் திபோர் கபு, போலன்ந்து வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கீ ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள், கடந்த மாதம் 25ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவிலுள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபால்கான் 9’ ராக்கெட்டில் ஜூன் 25ம்தேதி இந்திய நேரப்படி நண்பகல் 12.02 மணிக்கு விண்ணில் பாய்ந்தனர். சில நிமிடங்களுக்கு பிறகு ராக்கெட்டில் இருந்து பிரிந்த டிராகன் விண்கலம், 28 மணி நேரம் சுற்றுப்பாதையில் பயணித்து ஜூன் 26ம் தேதி மாலை 4.30 மணியளவில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது. ஆக்ஸியம் - 4 குழுவில் உள்ள நால்வரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி இருந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். நால்வரும் சுமார் 60 ஆய்வுகளை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இந்தியா சார்பில் சுபான்ஷு சுக்லா 7 ஆய்வுகளை மேற்கொண்டதாக தெரிகிறது. அதன்படி நுண் ஈர்ப்பு விசை சூழலுக்கு ஏற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்தும் அவர் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 14 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று( ஜூலை 14) சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலம் மூலம் பூமிக்கு திரும்ப புறப்பட்டனர். 58 பவுண்டு சரக்குகள், 60க்கும் மேற்பட்ட சோதனை தரவுகளுடன் அவர்கள் பூமிக்கு திரும்பியுள்ளனர். 22.5 மணி நேர பயணத்திற்கு பிறகு இன்று (ஜூலை 15ம் தேதி) மாலை 3 மணியளவில் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களும் பூமியை வந்தடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப்பயணம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளா சுபான்ஷு சுக்லா , 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்திய வீரர் என்கிற பெருமையையும் பெறுகிறார்