கார், டூ வீலர் விலை குறைப்பு எவ்வளவு என விளம்பரம் செய்ய தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

nirmala sitharaman
இந்தியாவில் வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஆட்டோமொபைல் செக்டாரில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இருசக்கர மோட்டார் வாகனங்கள் (350 சிசி வரை), சிறிய வகைக் கார்கள், 10 நபர்கள் வரை இருக்கை வசதி கொண்ட சிறு பேருந்துகள், வணிக ரீதியான சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. .இதனால் செப். 21-க்குப் பிறகு ஆட்டோ மொபைல் சாதனங்கள் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 1500 சிசி-க்கு அதிகமான கார்கள், 4 மீட்டர் நீளத்திற்கு அதிகமுள்ள உயர் ரக கார்களுக்குக்கு வரி 40% என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்யுவி, எம்யுவி, எம்பிவி, எக்ஸ்யுவி கார்கள் இதில் அடங்கும். இதனிடையே ஜிஎஸ்டி குறைப்பால் கார், டூ வீலர் விலை கணிசமாக குறைய உள்ள நிலையில் ஒன்றிய அரசு புதிய அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. அதாவது, ஜிஎஸ்டி குறைப்பால் கார், டூ வீலர் எவ்வளவு விலை குறைகிறது என கடைகளின் முன் விலை பட்டியலை விளம்பரப்படுத்த வேண்டும் என்று கார் மற்றும் டூ வீலர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் சுவரொட்டிகள் இடம் பெற வேண்டும் என்றும் மத்திய அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.