எக்ஸ், யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை: நேபாள அரசு அதிரடி

social media ban
பேஸ்புக், எக்ஸ் (டுவிட்டர்), இன்ஸ்டா மற்றும் யூடியூப் போன்ற முக்கிய சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இதனை, நேபாள தகவல் தொடர்பு மற்றும் தகவல் துறை அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் உறுதிப்படுத்தினார். இருப்பினும், டிக்டாக், வைபர் மற்றும் மூன்று பிற சமூக ஊடக தளங்கள் அரசின் விதிமுறைகளுக்கு இணங்கிப் பதிவு செய்துள்ளதால், அவை தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். நேபாளத்தில் தங்கள் நிறுவனங்களை பதிவு செய்து, உள்ளூர் தொடர்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென பலமுறை சமூக வலைதளங்களுக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இதற்கு சமூக வலைதள நிறுவனங்கள் எந்த பதிலும் அளிக்காத நிலையில் 26 சமூக வலைதளங்களுக்கு தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. சமூக ஊடகங்களைக் கண்காணிக்கவும், பயனர்கள் மற்றும் நிறுவனங்கள் பகிரும் உள்ளடக்கத்திற்குப் பொறுப்பானவர்கள் என்பதை உறுதி செய்யவும் இத்தகைய சட்டங்கள் அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், இது தணிக்கை முயற்சி என விமர்சகர்களால் கடுமையாக எதிர்க்கப்படுகிறது. 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது விமர்சனங்களை கிளப்பியுள்ளது. எதிரிகளை மவுனமாக்கவும், கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்தவும் நோக்கம் கொண்டது என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.