அரியலுாரில் இரண்டு வீடுகளில் பணம், நகை துணிகர திருட்டு

அரியலுாரில் இரண்டு வீடுகளில் பணம், நகை துணிகர திருட்டு
X
திருட்டு
வாணாபுரம் அடுத்த அரியலுாரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி ஜோதி,52; கணவர் ராஜேந்திரன் கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்து விட்டார். மகன் சச்சிதானந்தம் இந்தோனேசியாவில் பொறியாளராக பணிபுரிவதால், ஜோதி சென்னை மறைமலைநகரில் உள்ள மருமகள் வைஷ்ணவி வீட்டில் வசிக்கிறார். அதேபோல், ராஜேந்திரனின் தம்பி தாமோதிரன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி ஆகியோர் சென்னை போரூரில் வசிக்கின்றனர். இதனால், அரியலுாரில் உள்ள இருவரது வீடுகளும் பூட்டியே இருக்கும்.ஊரில் உள்ள உறவினர்களின் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்க மட்டும் சொந்த ஊருக்கு வருவது வழக்கம். இந்நிலையில், திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக ஜெயந்தி நேற்று காலை அரியலுாருக்கு வந்துள்ளார். அங்கு இரண்டு வீடுகளின் கதவுகளும் உடைந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து, ஜோதிக்கு தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, ஜோதியின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 3 சவரன் செயின், ரூ.5ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரிந்தது. அதேபோல், ஜெயந்தி வீட்டில் இருந்த ரூ.2,500 பணத்தை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து ஜோதி அளித்த புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மேலும், கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு வீடுகளில் இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டது.
Next Story