கோடை விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள் .

X
இயற்கை எழில் கொஞ்சும் ஏற்காட்டிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வரத் தொடங்கினர். இதனிடையே கோடை விடுமுறையையொட்டி நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் அவர்கள் குகை கோவில், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஸ் கார்டன் போன்ற பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகமாக பொழுதை கழித்தனர். சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்ததால் ஏற்காட்டில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தது. மேலும் படகு இல்லத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சுற்றுலா பயணிகள் காத்திருந்து படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மதிய நேரத்தில் ஒண்டிக்கடை ரவுண்டானா பகுதியில் உள்ள உணவகங்களில் கூட்டம் அலைமோதியது. ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் மாலை நேரத்தில் சாலையோர கடைகளில் மிளகாய் பஜ்ஜி, ஸ்வீட் கான் போன்ற தின்பண்டங்களின் வியாபாரம் சூடு பிடித்தது. மேலும் போலீசார் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
Next Story

