பரமத்தி பேரூராட்சியில் சுங்கவரி வசூலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது.

X

பரமத்தி பேரூராட்சியில் சுங்கவரி வசூலரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்,செப்.10: பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி பேரூராட்சியில் தினசரி சுங்க வரி வசூல் செய்வதற்கு கோபி என்பவர் ஏலம் எடுத்துள்ளார். சுங்கவரி வசூல் செய்வதற்காக கர்நாடகா மாநிலம் தக்ஷன் மாவட்டம் நெல்லிக்கும்பேரி பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வரன் என்பவரது மகன் உஜ்வல் என்பவரை நியமனம் செய்துள்ளார். தற்பொழுது இவர் பரமத்தி அங்காளம்மன் கோவில் அருகே குடியிருந்து வருகிறார். உஜ்வல் பரமத்தி பேரூராட்சி பகுதிகளில் லோடு ஏற்றும், இறக்கும் வாகனங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கொண்டு வந்து விற்பனை செய்யும் வாகனங்களுக்கும் சுங்கவரி வசூல் செய்து வருகிறார். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை பரமத்தி இந்தியன் வங்கி எதிரே உள்ள ஒரு தனியார் எலக்ட்ரிக்கல் கடையின் முன்பு வாகனத்தில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றி கொண்டிருந்த வாகனத்தின் டிரைவரிடம் உஜ்வல் சுங்கவரி கேட்டுள்ளார். அப்போது அங்கு வந்த எலக்ட்ரிக்கல்ஸ் கடையின் உரிமையாளர் ரவி என்பவர் என் கடை முன் சிமெண்ட் ஏற்றும் லாரி டிரைவரிடம் எதற்காக சுங்கவரி கேட்கிறாய் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த ரவி சுங்கவரி வசூல் செய்யும் உஜ்வல் சட்டை பிடித்து இழுத்து தகாத வார்த்தைகளால் திட்டி அவரை பல இடங்களில் தாக்கி கீழே தள்ளி விட்டார். என் கடை முன் சுங்கவரி வசூல் செய்தால் உன்னை கொன்று விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கீழே விழுந்த உஜ்வலுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் வலி தாங்க முடியாமல் கதறினார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து உஜ்வலை பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். உஜ்வலை பரமத்தி காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் ரவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story