சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு: அண்ணாமலை கண்டனம்

annamalai
தமிழகச் சட்டப்பேரவையில் ஆளுநர் உரை, பட்ஜெட், துறை மானிய கோரிக்கைகள் விவாதத்தின்போது, அரசு சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கபடுவது வழக்கம்.2021-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை, சுமார் 8 ஆயிரத்து 634 புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 4 ஆயிரத்து 516 அறிவிப்புகள் அமல்படுத்தப்பட்ட நிலையில், 3 ஆயிரத்து 455 அறிவிப்புகள் தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அரசு வெளியிட்ட அறிவிப்புகளில் 256 அறிவிப்புகளை செயல்படுத்த சாத்திமில்லை என்பதால், அவற்றை கைவிட அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து பாஜக தேசிய குழு உறுப்பினர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து, வெற்று விளம்பரத்துக்காகத் திமுக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு மக்களை ஏமாற்றி வந்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார். தற்போது சட்டசபையில் வெளியிட்ட 256 திட்டங்களை, நிறைவேற்ற சாத்தியமில்லை எனக் கூறி அதனைக் கைவிட திமுக அரசு முடிவெடுத்துள்ளதாகச் செய்தி வெளியாகியிருக்கிறது எனவும் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 10 சதவீதம் கூட அக்கட்சி முழுமையாக நிறைவேற்றவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில், சொல்லாமல் செய்தது, ஊர் ஊராகக் கருணாநிதியின் சிலை வைத்தது மட்டும்தான் என அண்ணாமலை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.