அறநிலையத்துறை நிதியில் கல்லூரி துவங்க வேண்டாமென கூறவில்லை: எடப்பாடி பழனிசாமி

EPS
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 நாள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு நேற்று வந்தார். முதல்நாளில் விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனத்தில் ரோடு ஷோவில் கலந்து கொண்டு, பொதுமக்களிடையே உரையாடினார். விழுப்புரத்தில் மாலை 5 மணிக்கு நடந்த பிரசார கூட்டத்திற்கு பிற்பகலே வெளியூரிலிருந்து பொதுமக்கள் அழைத்து வரப்பட்டு சிக்னல் பகுதியில் வெயிலில் நீண்டநேரம் காத்திருக்க வைத்ததால் அவர்கள் கடும் அவதிப்பட்டனர். சிலர் மயக்கம் வரும்படி இருந்ததால் நடையை கட்டினர். பிரசார கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘2 நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தை சொன்னேன். ஒரே நேரத்தில் 9 கல்லூரிகளை துவக்கினார்கள். அறநிலையத் துறையிலிருந்து நிதியை எடுத்து அந்த கல்லூரி ஆரம்பிக்கப்படும் என்று சொன்னார்கள். அறநிலையத் துறையிலிருந்து நிதியை எடுத்து கல்லூரியை துவங்கினால் மாணவர்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி கிடைக்காது. அரசு கலை அறிவியல் கல்லூரியாக இருந்தால் அனைத்தும் கிடைக்கும். மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்குதான் இதை சுட்டிக் காட்டினேன். அறநிலையத்துறையிலிருந்து பணத்தை எடுத்து கொடுத்தால் எடப்பாடி பழனிசாமி கொதிக்கிறார் என்கிறார்கள். நீங்கள் எடுத்துக்கொடுங்கள். கல்லூரி தொடங்க வேண்டாமென்று சொல்லவில்லை என்றார். ஏற்கனவே அவர் கோவையில் பேசும்போது, கோயில் நிதியிலிருந்து கல்லூரி தொடங்கக்கூடாது என்று பேசியதற்கு மாணவர்கள், பெற்ேறார் என அனைத்து தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் வெடித்து உள்ள நிலையில் நான் அப்படி பேசவே இல்லை என்று எடப்பாடி அந்தர் பல்டி அடித்துள்ளார். புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி திடல் பகுதியில், எடப்பாடியை வரவேற்று சாலையோரம் வைக்கப்பட்டிருந்த பிரமாண்ட பேனர் காற்றில் சாலையின் நடுவே விழுந்தது. அதிஷ்டவசமாக அப்போது யாரும் செல்லாததால் வாகன ஓட்டிகள் உயிர்தப்பினர்.