முறைகேடு வழக்கை தமிழ்நாடு காவல்துறையே நேர்மையாக விசாரணை நடத்தும்: ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு!!

மதுரை
வரி விதிப்பில் மதுரை மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்திய வழக்கை, சிபிஐக்கு மாற்ற உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. மதுரை மாநகராட்சி வரிவிதிப்பு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற கோரி அதிமுக கவுன்சிலர் ரவி ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு பிறப்பித்த உத்தரவில், “வரிவிதிப்பில் நடந்த முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற முடியாது. முறைகேடு தொடர்பாக மண்டலத் தலைவர் உள்ளிட்ட 7 பேரை பதவி விலக வைத்திருக்கும் முதல்வரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. எனவே இவ்வழக்கில் விசாரணை நேர்மையாக நடக்கும் என நம்புகிறோம். மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பு முறைகேடு வழக்கை தமிழ்நாடு காவல்துறையே நேர்மையாக விசாரணை நடத்தும். அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றத் தேவையில்லை, ஏற்கனவே சிபிஐயிடம் அதிக வழக்குகள் உள்ளன. தென்மண்டல ஐ.ஜி, மதுரை ஆணையர் இணைந்து மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் சிறப்புக் குழு அமைத்து வழக்கை விசாரிக்க வேண்டும். சிறப்பு விசாரணைக்குழு அதன் அறிக்கையை அவ்வப்போது உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றம் அதனை கண்காணிக்கும். அத்துடன் வழக்கு தொடர்பாக அரசு தரப்பில், ஜூலை 25ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்”இவ்வாறு தெரிவித்தனர்.