தமிழகத்தில் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: கோவை, நீலகிரிக்கு மஞ்சள் அலர்ட்

Yellow Alert
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்கள் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தீவிரம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் பெய்த கனமழையினால், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டோடியது. அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இந்த நிலையில், நீலகிரி, கோவை உள்பட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவித்து சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்கள் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.