பீகார் vs தமிழ்நாடு- வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் புதிய நடைமுறை!!

பீகாரில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில், ஒரே நேரத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை மேற்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, இது தொடர்பாக 12 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில், பீகாரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இருந்து ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை திருப்பி அளிக்காத வாக்காளர் தொடர்பான விவரங்கள் மற்றும் அதற்கான காரணத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு செய்து அந்த பட்டியலை சம்பந்தபட்ட உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்களில் தகவல் பலகையில் வெளியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதுக்குமான பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களை பெறும் போது வாக்காளர்களிடம் இருந்து எந்த வித ஆவணங்களையும் பெறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பிறகு தான் சம்பந்தபட்ட வாக்காளர்களுக்கு நோட்டீஸ் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு விடாக செல்லும் போது பெயர் சேர்க்கும் விண்ணப்பமான படிவம் 6ஐ கொண்டு செல்ல வேண்டும் என்றும் புதிதாக சேர விரும்பும் வாக்காளர்கள் கேட்டால் அந்த படிவத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகியவற்றை தகுதியேற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களையும் பெறலாம் என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
