சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை அம்மா உணவகங்களில் இலவச உணவு: முதல்வர் மு.க.ஸ்டாலின்
X

Cm Stalin

கனமழை காரணமாக அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. இன்றும் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், கனமழை காரணமாக அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன." "தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன." "இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்," என குறிப்பிட்டுள்ளார்.

Tags

Next Story